மைசூரில் பிரதமர் மோடி தங்கியதற்கான வாடகை பாக்கி 80 லட்சம் ரூபாய்.. நட்சத்திர ஓட்டல் எச்சரிக்கை
ஊட்டி: 2023ல் மைசூரு புலிகள் காப்பகத்தில் கர்நாடக வனத்துறை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதற்கான வாடகை பாக்கி 80 லட்சம் ரூபாய் இதுவரை செலுத்தப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள ஓட்டல் நிர்வாகம், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனவிலங்கு சரணாலயம் இருக்கிறது. இந்த இடம் அடர்ந்த வனப்பகுதியில் அதுவும் கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி இருக்கிறது. மேலும் ஊட்டி மைசூரு பிரதான சாலையில் உள்ள இந்த காப்பகத்தை ஒட்டி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டது.

பந்திப்பூர் புலிகள் காப்பகம் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 ஆயிரத்து 278 சதுர கிலோ மீட்டரில் முதலில் 9 புலிகள் விடப்பட்டு இருந்தது. தற்போது 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 53 புலிகள் இருக்கிறது. இந்த புலிகள் காப்பகம் தொடங்கி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு சென்றார். அப்படி சென்ற பிரதமர் நரேந்திர மோடி மைசூருவில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா என்ற நட்சத்திர ஓட்டலில் அன்று இரவு தங்கி ஓய்வெடுத்தார். அதன்பின்னர் மறுநாள் காலை அந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்றார். பின்னர ஹெலிகாப்டர் மூலமாக அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமனஹள்ளிக்கு சென்றார்.
பின்னர் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி வனப்பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரம் சபாரி அணிந்து சென்று ஜீப் சவாரி செய்து வனவிலங்களை பார்வையிட்டார். பந்திப்பூர் காப்பகத்தில் புலிகள் மற்றும் யானைகள் தவிர, கரடிகள், இந்திய மலைப்பாம்புகள், குள்ளநரிகள், நான்கு கொம்பு மான்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை பிரதமர் மோடி தனது ஜீப் சவாரியின்போது பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சென்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதற்காக வந்து தங்கிய நட்சத்திர ஓட்டலில் வாடகை கட்டணம் 80 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த 80 லட்சம் வாடகை பாக்கியை இதுவரை கர்நாடகா வனத்துறை செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.. வாடகை பாக்கியை செலுத்த தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரேடிசன் ப்ளூ பிளாசா நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ரேடிசன் ப்ளூ பிளாசாவின் பொது மேலாளர், வனத்துறை அதிகாரி பசவராஜுக்கு மே 21, 2024 அன்று கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் "எங்கள் ஹோட்டல் சேவைகளைப் பயன்படுத்திய 12 மாதங்களுக்குப் பிறகும்" பில்கள் இன்று வரை செலுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக கடிதம் மூலம் வலியுறுத்தியும் இந்த பில்கள் செலுத்தப்படாமல் உள்ளன. நிலுவையில் உள்ள பாக்கிகளுக்கு ஆண்டுக்கு 18% தாமதமாக செலுத்தும் வட்டியாக ₹12.09 லட்சத்தை (தாமதமாக செலுத்துவதற்கு) சேர்த்து தர வேண்டும். ஜூன் 1, 2024க்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே கர்நாடகா வனத்துறையோ, இது மத்திய அரசின் திட்டம் என்று கூறியதுடன், மத்திய அரசு தான் தர பணம் தர வேண்டும் என்று கைவிரித்துவிட்டது.












Click it and Unblock the Notifications