பாஜகவின் இதயத்தில் தமிழகம் உள்ளது.. பல்லடம் பொதுக் கூட்டத்தில் மோடி நெகிழ்ச்சியாக பேச்சு
பல்லடம்: தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத போதிலும் அந்த மாநிலத்தை தன் இதயத்தில் வைத்துள்ளது என என் மண் என் மக்கள் யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண், என் மக்கள் நடைபயணத்தை நிறைவு விழாவாகவும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார கூட்டமாகவும் பல்லடத்தில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோயில் மலை எதிரில் உள்ள 1400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் இன்று பிரம்மாண்ட பொதுக் கூட்டம் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நீலகிரி மலைவாழ் மக்கள் நெய்த சால்வையை பரிசாக கொடுத்தனர். அது போல் மஞ்சள் விவசாயிகள் மஞ்சள் கிழங்குகளை வைத்து மாலைகளை தயார் செய்திருந்தனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அந்த கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் கூறுகையில் தமிழகத்தின் கொங்கு மண்டலம் இந்தியாவின் பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஜவுளித் தொழில் துடிப்பான தொழிலாக உள்ளது. காற்றாலை மின்சார உற்பத்தியிலும் முன்னணி வகிக்கிறது
இந்த மாநாட்டை பார்க்கும் போது காவிக் கடலை பார்ப்பது போல் உள்ளது. இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் பாஜக குறித்துதான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நாடுதான் முதன்மையானது என பாஜக கருதுகிறது.
தமிழகத்தின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள். அண்ணாமலை யாத்திரையை மட்டும் நடத்தவில்லை, அனைவருக்கும் அனைத்தும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு வீடாக கொண்டு போய் சேர்த்துள்ளார். என்னை பொருத்தமட்டில் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் மிக சிறப்பானதாக இருக்கிறது.
காசி தமிழ் சங்கமம், செங்கோல் இவற்றின் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறேன். 1991 ஆம் ஆண்டு நான் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்துதான் தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.
தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும் தமிழகத்தை தன் இதயத்தில் பாஜக வைத்துள்ளது. தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள். பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள் பாஜகவின் வளர்ச்சியை பார்த்து அச்சம் கொள்கிறார்கள். அதனால்தான் பாஜகவை தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சி செய்த போது திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த போது காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு செய்ததை விட 3 மடங்கு நிதியை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு திமுக எதுவும் செய்யவில்லை. மோடி அவருக்கு மட்டும் இல்லை ஏழைகளுக்காகவும் உழைக்கிறார். மோடியின் உத்தரவாதம் இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர இருக்கிறது. தமிழகத்தில் இலவச சிலிண்டர், பிரதமர் வீடு கட்டும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications