கருணாநிதி நிச்சயமாக முழுமையாக குணமடைவார்: அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை
கருணாநிதி நிச்சயமாக முழுமையாக குணமடைவார் என்று பாமக அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நிச்சயமாக முழுமையாக குணமடைவார் என்று நம்புவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முதுமை காரணமாக அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறார். அவ்வப்போது சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு உணவுக் குழாய் மாற்றும் சிகிச்சை நடைபெற்றது. பின்னர், வீட்டுக்கு வந்த கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு சிறு நீர் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனையில் அளிக்கக் கூடிய சிகிச்சை அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக சென்னை கோபாலபுரத்துக்கு வந்தார். அங்கே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கருணாநிதிக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். கருணாநிதி நிச்சயமாக முழுமையாக குணமடைவார் என்று நம்புகிறேன். கருணாநிதி 100 வது பிறந்தநாளை கொண்டாட மக்கள் விரும்புகிறார்கள்.
ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்தேன். அவர் கருணாநிதிக்கு தொற்று குறைந்து கொண்டிருக்கிறது விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். கருணாநிதி நிச்சயமாக முழுமையாக குணமடைவார் என்று நானும் நம்புகிறேன்.
உலகில் வாழும் அத்துணை தமிழர்களும் கருணாநிதி குணமடைய வாழ்த்துகிறார்கள்.. பிரார்த்திக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications