பச்சமுத்து சிறை தண்டனை உத்தரவுக்கு எதிர்ப்பு: நீதிமன்றம் முன்பு ஐஜேகே தொண்டர்கள் சாலை மறியல்
சென்னை: பச்சமுத்து சிறை தண்டனை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு திரண்டிருந்த ஐஜேகே கட்சி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூ.72 கோடி மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். குழும் தலைவர் பச்சமுத்து நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உடனே தமக்கு உடல்நிலை சரியில்லை என போலீசிடம் பச்சமுத்து கூறினார்.

ராயப்பேட்டை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர், சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று இரவு பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அவரை செப்டம்பர் 9ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அங்கு திரண்ட ஐஜேகே கட்சியினர் பச்சமுத்து சிறை தண்டனை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகம் முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு, பச்சமுத்து கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications