தங்கத்தை கொடுத்து தாலியை பறிப்பவர்கள் அவர்கள்- ஏ.கே.மூர்த்தி பேச்சு
ஆரணி: தாலிக்கு தங்கம் கொடுப்பவர்களே இன்னொரு பக்கம் குடிக்க மதுவை கொடுத்து தாலியை பறிக்கிறார்கள்.இப்படியே போனால் மதி இல்லாமல் அழிந்தவர்களை விட மதுவால் அழிந்தவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்று பேசியுள்ளார் ஆரணி தொகுதி பாமக வேட்பாளர் மூர்த்தி.
ஆரணி தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மழையூர் உள்ளிட்ட ஆரணியைச் சுற்றி உள்ள 79 கிராமங்களில் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் , "இதுவரை ஆண்ட அரசும் சரி, ஆளும் அரசும் சரி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக மக்களின் வாழ்க்கையோடு தான் விளையாடுகிறது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, இன்னொரு பக்கம் இலவசங்களை கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.
தாலிக்கு தங்கம் கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மதுவை கொடுத்து தாலியை பறிக்கிறார்கள். இது வரை 40 லட்சம் பெண்கள் தாலியை இழந்துள்ளார்கள்.
போகும் போக்கை பார்த்தால் ரேசன் கடையில் கூட மது விற்பார்கள். ஒரு சொட்டு மது விற்காமல் குஜராத்தை மோடி ஆட்சி செய்ய வில்லையா என்ன?.
குஜராத்தில் மின்சாரம் தடை பட்டால் பெரிய,அதிசய செய்தி. இங்கு மின்சாரம் இருந்தால் அதிசய செய்தி. இந்த மாதிரி அவல நிலை மாற மத்தியில் நிலையான நல்லாட்சி வேண்டும். எனவே மோடி பிரதமர் ஆக ஆதரவு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்" என்று பேசினார் அவர்.