ரூ.570 கோடி பறிமுதல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு ராமதாஸ், முத்தரசன் வரவேற்பு
சென்னை: ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதேபோல திருப்பூரில் 3 கன்டெய்னர்களில் ரூ.570 கோடி சிக்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டசபைத் தேர்தலின் போது திருப்பூர் அருகில் 3 பெட்டக சரக்குந்துகளில் கடத்தி வரப்பட்ட ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 3 நாட்கள் முன்பாக இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசுத் தரப்பிலும் தேர்தல் ஆணையத் தரப்பிலும் அளிக்கப்பட்ட அனைத்து விளக்கங்களும் ஐயத்திற்கு அப்பாற்பட்டவையாக இல்லை. இந்த விஷயத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும், பாரத ஸ்டேட் வங்கியும் நடந்து கொண்ட விதம் மர்மமானதாகவே இருந்தது.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் 18 மணி நேரம் கழித்தே பாரத ஸ்டேட் வங்கி அதற்கு உரிமை கோரியது. கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பணம் வைப்பு மையத்திலிருந்து தான் அந்த பணம் கொண்டு செல்லப்பட்டது என்றால் அந்த பணம் அங்கிருந்து சரக்குந்தில் ஏற்றப்பட்டது குறித்த வீடியோ பதிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை பாரத ஸ்டேட் வங்கி நிராகரித்தது ஐயத்தை அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் விளையாடியது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ள பணத்தை சரக்குப் பெட்டகத்தில் கொண்டு சென்ற போது தான் பறக்கும் படையினரிடம் பிடிபட்டதாக முன்வைக்கப்படும் வாதம் நம்பும்படியாக உள்ளது.
இவ்விஷயத்தில் யாரையோ காப்பாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் நிலையில், அனைத்து ஐயங்களுக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணையில் தான் விடை கிடைக்கும். அந்த வகையில், 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
முத்தரசன் வரவேற்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குபதிவு நெருங்கிய நிலையில் கடந்த மே 13ம் தேதி திருப்பூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.570 கோடி 3 கன்டெய்னர்களில் கொண்டு செல்லபட்டதை மடக்கி பிடிக்கப்பட்டது.
நீண்ட தாமதத்திற்கு பிறகு பாரத ஸ்டேட்வங்கி கன்டெய்னரில் இருந்த பணத்திற்கு உரிமை கோரியது. இதில் மத்திய அரசின் செல்வாக்கு செலுத்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. ரூ.570 கோடி பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப் படுவதற்காக கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறப்பட்டது. இதில் பல்வேறு மர்மங்கள் நீடித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
ஒரு குறிப்பிட்ட காலவரம்பிற்குள் முழு உண்மையையும் கண்டறிந்து அவைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என்று முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications