கட்டமைக்கப்பட்ட வழக்கங்களை தகர்த்து எறிந்தவர் பங்காரு அடிகளார்.. ராமதாஸ் இரங்கல்!
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமை கொண்டவர் பங்காரு அடிகளார் என ராமதாஸ் புகழ்மாலை சூட்டியுள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்தவர் பங்காரு அடிகளார். மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவான அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பங்காரு அடிகளார் எனது சமகாலத்தவர் என்பதையும் கடந்து எனது குடும்ப நண்பர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையுண்டு என்பதற்கிணங்க ஆன்மிக வழியில் மக்களை முன்னேற்றவும், அவர்களுக்கு அமைதி வழங்கவும் உழைத்தவர். இறைவனுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு; அவர்களால் இறைவனை நெருங்க முடியாது; குறிப்பாக பெண்கள் கருவறையை நெருங்கக் கூட முடியாது என்று திட்டமிட்டு வழக்கங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் பங்காரு அடிகளார் தகர்த்தார்.
பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு. பெண் குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துவது தான் தாம் அவதரித்ததன் நோக்கம் என்று பங்காரு அடிகளார் அடிக்கடி கூறுவார்.
அதற்கேற்ப மகளிர் முன்னேற்றம் என்ற உன்னத நோக்கத்திற்காக அருள்திரு. பங்காரு அடிகளாரும், ஆதிபராசக்தி சித்தர் பீடமும் ஆற்றிய பணிகள் போற்றத் தக்கவை. இயற்கையைப் போற்றியும், அனுசரித்தும் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்ற பங்காரு அடிகளாரின் அறிவுரை ஆன்மிக எல்லையை தாண்டி அனைவருக்கும் பொதுவானது. அவரது அறிவுரை எவ்வளவு உண்மையானது என்பதை காலநிலை மாற்றம் என்ற பெயரில் இன்று நடக்கும் நிகழ்வுகள் மூலம் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது.

அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்களின் கல்விப் பணியும் பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வியில் தொடங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை & அறிவியல், கல்வியியல் உள்ளிட்ட அனைத்து புலங்களிலும் பட்டம் வழங்கும் கல்லூரிகள் வரை தரமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவை வழங்குதல், கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க பொது மற்றும் பல் மருத்துவமனைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பள்ளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் என அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் வாயிலாக அருள்திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மேற்கொண்ட பணிகள்அனைத்தும் பாராட்டத்தக்கவை.
பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications