ஜனவரி 2ல் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
சென்னை: பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜனவரி 2 ஆம் தேதி கூட உள்ளதாக கோ.க.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் கோ.க.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் வரும் 2 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இப்பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னிலை வகிக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமை ஏற்கிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், 2014 ஆம் ஆண்டில் ஆற்ற வேண்டிய பணிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதித்து முடி வெடுக்கப்பட உள்ளது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிறைவுரையாற்ற உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள், கட்சி துணை அமைப்புகளின் நிர்வாகிகள், வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த தலைமைப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்ன்று கூறியுள்ளார்.
திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி எதுவும் வைக்கப் போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டது. அதேபோல திமுகவும் காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணி கிடையாது என அறிவித்து விட்டது. இந்த நிலையில் பாமக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட உள்ளதால் பாமகவின் நிலைப்பாட்டில் எதுவும் மாற்றமான அறிவிப்பு வெளியாகுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications