இந்த 8 தொகுதிகள்தான் பாமகவுக்கு?
சென்னை: பத்து தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்த பாமக, தற்போது பாஜகவுடன் சற்று இறங்கி வந்து 8 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து நாளைதான் முறைப்படி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆரம்பத்தில் யாருடனும் கூட்டணி கிடையாது என்று கூறி வந்தார் டாக்டர் ராமதாஸ். பின்னர் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றார்.
இந்த நிலையில் தற்போது பாஜகவுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவுடன் ஆரம்பத்தில் தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாக கடுமையாக மோதி வந்தது பாமக. இதனால் உடன்பாடு ஏற்படாமல் பெரும் இழுபறி காணப்பட்டது. இந்த இந்த நிலையில் தற்போது சமரசம் ஏற்பட்டு உடன்பாடும் ஏற்பட்டு விட்டதாம்.
10 தொகுதியிலிருந்து எட்டுக்கு
பாமக ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தது. அதை விட்டுக் கொடுக்கவே முடியாது என்றும் பிடிவாதம் பிடித்து வந்தது. தற்போது பாஜகவுடன் அது இறங்கி வந்து 8 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாம்.
7 தொகுதிகளை வி்ட்டுக் கொடுக்கிறது
ஏற்கனவே பாமக, அறிவித்த 10 தொகுதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாம்.
அதற்குப் பதில் இந்த எட்டு...
அதற்குப் பதில், தென்சென்னை, அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாம்.
நாளைக்குள் இறுதிப் பட்டியல்
தேமுதிகவுடனும் தொகுதிப் பங்கீட்டை முடித்த பின்னர் நாளை அனைத்துக் கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரத்தை பாஜக வெளியிடுமாம்.
சிதம்பரத்தில் வடிவேல் ராவணன்
இதற்கிடையே தனது சிதம்பரம் தொகுதி வேட்பாளரை பாமக மாற்றவுள்ளதாம். சிதம்பரத்தில் திருமாவளவன் திமுக ஆதரவுடன் களம் இறங்குகிறார். முன்பு அங்கு, வேட்பாளராக கோபி அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்குப் பதில், விழுப்புரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வடிவேல் ராவணனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாம் பாமக.