"அன்புமணி எனும் நான்...." பஞ்ச் டயலாக் பேசிய பாமகவை பஞ்சராக்கிய வாக்காளர்கள்
சென்னை: கட்சியின் சொந்த பலம் என்னவென்று கூட தெரியாமல் "முதல்வர்" நாற்காலி கனவில் மிதந்தவர் பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். தற்போது அன்புமணி உள்ளிட்ட பாமக தலைவர்களுக்கு அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 3-வது இடம்தான் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு தமிழக வாக்காளப் பெருங்குடிமக்கள் விரட்டியடித்திருக்கிறார்கள்.
பாமகவைப் பொறுத்தவரையில் அது வடமாவட்ட கட்சியாகத்தான் அறியப்பட்டது. அதனது செல்வாக்கும் வடமாவட்டங்களில் மட்டுமே இருந்தது என்பது கள யதார்த்தம். பாமகவின் கோட்டை என்று கருதப்பட்ட இந்த வட மாவட்டங்களில் விஜயகாந்த் தேமுதிக உள்ளே நுழைந்தது.

இதனால் பாமகவின் நிலை பரிதாபத்துக்குரியதாகி தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு விரட்டியடிக்கப்பட்டது. பாமகவைப் பொறுத்தவரையில் இந்த இரு மாவட்டங்களில்தான் செல்வாக்கு இருக்கிறது; இந்த மாவட்டங்களில் 2 அல்லது 3 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பும் பாமவுக்கு இருக்கிறது என்றுதான் கருதப்பட்டு வந்தது.
ஆனாலும் தங்களது பலத்தை மிகையாக கருதிக் கொண்டு "அன்புமணி எனும் நான்" "ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து" என்றெல்லாம் ஏக பில்டப் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதாகவெல்லாம் அறிவித்தனர். ஆனால் அவர்களது வேட்பாளர்களே திமுக, அதிமுகவில் தஞ்சமடைந்த கதைதான் நடந்தது.
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் "ஈயம் பல் இளித்தது" கதையாக பாமகவின் பரிதாப நிலை வெளிப்பட்டுள்ளது. அன்புமணி போட்டியிடும் பென்னாகரம், காடுவெட்டி குரு போட்டியிடும் ஜெயங்கொண்டம், பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் 2-வது இடம்தான் பாமகவுக்கு. பாமக தலைவர் ஜி.கே. மணிக்கு அவர் போட்டியிட்ட மேட்டூர் தொகுதியில் 3-வது இடம்தான்.
பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட கடலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாங்கிய வாக்குகளில் சரிபாதியைக் கூட பாமக வேட்பாளரால் பெற முடியவில்லை. இங்கு சீமானுடன் 4-வது; 5-வது இடத்துக்கு பாமக மல்லுக்கட்டுகிறது. நெய்வேலி, பண்ருட்டியில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாமக.
தமிழக மக்கள் எந்த கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதைவிட எந்தெந்த கட்சிகள் வந்துவிடவே கூடாது என்பதில் ரொம்பவே கவனமாகத்தான் இருக்கிறார்கள். அதுவும் பாமக மீது தமிழக மக்களுக்கு அவ்வளவு பிரியம்....
பாமக இனி கனவிலும் முதல்வர் பதவியை நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மரண அடியை கொடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications