ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளைக்கு அரசே காரணம்– ராமதாஸ்
சென்னை: ஆம்னி பேருந்துகளின் ஆதிக்கம் பெருகுவதற்கும், கட்டணக் கொள்ளைக்கும் அடிப்படைக் காரணம் தமிழக அரசு தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணம் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகவும், இக்கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.
பயணிகளை பெரிதும் பாதிக்கும் இக்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான பேருந்துகள்:
மேலும், "தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டணம் எந்தவித ஒழுங்குமுறைக்கும் உட்படாமல் விருப்பம்போல உயர்த்தப்படுகிறது.

இருமுறை உயர்வு:
ஆண்டுக்கு குறைந்தது இருமுறை கட்டணத்தை உயர்த்துவதை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும், கடந்த மே மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

தீபாவளினா தனி உயர்வு:
தீபாவளி திருநாள் காலத்தில் மேலும் 30 முதல் 40% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விடுமுறையிலும் அதிகம்:
அதேபோல், வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் சில பேருந்துகளில் வழக்கமாக உள்ளது.

நேர்மைக் கேடான செயல்:
திருவிழாக் காலங்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ பேருந்துகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரிக்காத நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு பயணக் கட்டணத்தை உயர்த்துவது நேர்மைக்கேடானது ஆகும்.

கொஞ்சம்தான் நியாயம்:
டீசல் விலை உயர்வு, காப்பீட்டுக்கட்டணம் அதிகரிப்பு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்காக முன்வைக்கப்படும் காரணங்களில் ஓரளவு நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

உரிமை யார் கொடுத்தா?:
அதற்காக ஒரே ஆண்டில் 30 முதல் 50% வரை கட்டணத்தை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு யார் அளித்தது என்பது தெரியவில்லை.

கொள்ளை அடிக்கும் பேருந்துகள்:
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, ஆம்னி பேருந்துகளின் ஆதிக்கம் கடந்த பத்தாண்டுகளாகத் தான் அதிகரித்துள்ளது.

அரசும் காரணம்:
அரசுப் பேருந்துகள் மிக மோசமாக பாராமரிக்கப்படுவதும், குறித்த காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாததும் இதற்கு காரணமாகும். அவ்வகையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காததுடன் அவற்றின் ஆதிக்கம் பெருகுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருந்தது தமிழக அரசு தான்.

அனுமதிப்பது பெரும் தவறு:
மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது.

தமிழக அரசு நடவடிக்கை:
எனவே, தனியார் பேருந்து கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications