இளம்பெண்களை குறிவைக்கும் ”போலி” பதிவுத்திருமணங்கள்- நடவடிக்கை கோரும் ராமதாஸ்!

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் கடந்த 2013 ஆம் ஆண்டில் விதிகளுக்கு முரணான முறைகளில் செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஓராண்டில் மட்டும் 3500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவிக்காக மனு:
சென்னையைச் சேர்ந்த ஒருவர் தான் காதல் மணம் செய்து கொண்ட மனைவி அவரின் பெற்றோரது சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாகவும், அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
விசாரித்த நீதிமன்றம்:
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொருவரும் அதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதில் சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்த போது, தங்களின் கணவர் என்று கூறிக்கொள்பவரை தெரியும்.
போலித் திருமணச் சான்றிதழ்:
ஆனால் அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், போலியாக திருமணப் பதிவுச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வடசென்னையில் மோசடி:
இதைத் தொடர்ந்து போலிப்பதிவுத் திருமண மோசடி குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில் வடசென்னை, இராயபுரம் ஆகிய பதிவாளர் அலுவலகங்களில் நடந்துள்ள இந்த மோசடி அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
விதிகளுக்கு முரணான திருமணப் பதிவுகள்:
வடசென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1559 திருமணங்களும், இராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1937 திருமணங்களும் விதிகளுக்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான திருமணங்கள் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணமகள் இல்லாமல் கல்யாணம்:
இவற்றில் ஏராளமான திருமணங்கள் மணமகள் இல்லாமலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை:
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல், அப்பெண் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே வராமல், அவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக பதிவுத் திருமணச் சான்றிதழை தயாரிக்க முடியும் என்றால், தமிழகத்தில் உள்ள எந்த இளம் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தான் கருத வேண்டும்.
பணம் பறிக்கத் திட்டம்:
இவ்வாறு செய்யப்பட்ட திருமணங்களில் பெரும்பாலானாவை பணம் பறிக்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட காதல் நாடகத் திருமணங்களாகத்தான் இருக்க வேண்டும்.
காதல் நாடகத்தால் பறிபோகும் மகிழ்ச்சி:
பெண்களைக் கவர்ந்து, காதல் நாடகத் திருமணங்களை அரங்கேற்றி சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் பறிக்கும் செயல்களில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பெற்றோர்களின் அச்சம்:
இப்போது போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்து, அப்பாவி பெண்களை தங்களின் மனைவி என்று உரிமை கோரி சிலர் மிரட்டுவதன் நோக்கமும் பணம் பறிப்பதாகவே இருக்கும் என்று பெற்றோரிடையே எழுந்துள்ள அச்சத்தை ஒதுக்கிவிட முடியாது.
சட்டத்திருத்தங்கள் தேவை:
இனி, இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்கள் நடக்காமல் தடுக்கத் தேவையான சட்டத்திருத்தங்களைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications