இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு பாமக இன்று கோட்டை நோக்கி பேரணி
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவருக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது.
சென்னை: இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த சரோனுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பா.ம.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
''வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் பிரிட்ஜோ சிங்களப் படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மீனவர் பிரிட்ஜோ கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதற்கு காரணமான இலங்கைக் கடற்படையினரை கைது செய்து ஒப்படைக்கும்படி இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்.

அதை செய்யத் தவறினால் இண்டர்போல் மூலமாகவோ, இந்தியப்படைகளை அனுப்பியோ அவர்களை கைது செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு ஜெயலலிதா 115 கடிதங்கள் எழுதியுள்ளார் என்பதையே சாதனையாக பேசிக் கொண்டிருக்காமல், நமது மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
அத்துடன் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
அதன்படி இன்று காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெறும். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் பேரணி சென்னை தலைமைச் செயலகத்தை அடைந்து கோரிக்கைகளை வலியுறுத்தும் மனு முதலமைச்சரிடம் வழங்கப்படும்.'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications