பிரிய நண்பர் கருணாநிதி மறைந்தார் என்பதை நம்ப முடியவில்லை: ராமதாஸ் அஞ்சலி
சென்னை: எனது பிரிய நண்பர் கருணாநிதி மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த துயரத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது பிரிய நண்பர் கருணாநிதி மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த துயரத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை.

ஒரு பல்கலைக்கழகம் மறைந்தார். 6 தலைமுறை அரசியல் செய்தவர் இந்தியாவில் கருணாநிதியைத் தவிர வேறு யாருமில்லை. பன்முகத் தன்மை கொண்டவர். எந்த துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை. கலையானாலும், இலக்கியமானாலும், வரலாறானாலும், திரைத்துறையானாலும் எதையும் அவர் விட்டு வைக்கவில்லை.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் அயராது பாடுபட்ட பெருந்தலைவர் கருணாநிதி மறைந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை நாம் தொடருவோம். அவருடைய பிரிவை தமிழர்களுடைய உள்ளங்களில் இருந்து பிரிக்க முடியாது. அவருடைய பிரிவை தாளாது இருக்கிறேன். அவருடைய மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications