பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் பாமக இடம்பெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனால் அக்கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற சந்தேகம் இருந்தது.
இந்நிலையில் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாஜகவுடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இன்று பாமக-பாஜக பேச்சு வார்த்தை
இன்று காலை 12 மணிக்கு பாமக குழுவினர் கமலாலயம் வருகின்றனர். அங்கு தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடைபெறுகிறது.