முடியல முடியல பால் வாங்க முடியல… முழங்கிய பாமக
சென்னை: பால் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி பாமக சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் பங்கேற்றனர்.
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5, எருமை பால் ரூ.4ம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்த கையோடு ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேமுதிக, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பார்ட்டம் நடத்தியுள்ள நிலையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெண்களும் பங்கேற்பு
தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். மின்கட்டண உயர்வுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.
பால் விலை உயர்வு
பால் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
டீ குடிக்க முடியல
முடியல முடியல பால் வாங்க முடியல பாட்டாளி ஏழைங்க டீ குடிக்க முடியல என பாட்டாளி மக்கள் கட்சியினர் முழக்கமிட்டதோடு அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.