பாமக மாநில மாநாடு வரும் 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பு - ராமதாஸ் அறிவிப்பு !
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடு வரும் 27 ம் தேதி வண்டலூர் விஜிபி மைதானத்தில் நடைபெறும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடு வரும் 14 ஆம் தேதி சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இம்மாநாட்டை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநாட்டுக்கு உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது. மாநாடு நடத்த இடைக்காலத் தடை பெற்றதுடன், மாநாட்டு பணிகளை மேற்கொள்வதற்கும் அரசு தடை வாங்கியது.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற நீதிபதிகள் மாநாட்டை திட்டமிட்டபடி நடத்த அனுமதி அளித்தனர். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தடை காரணமாக கடந்த 3 நாட்களாக மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடிய வில்லை;
மேலும் 14 ஆம் தேதிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் முடித்து மாநாட்டை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் மாநில மாநாட்டை இம்மாதம் 27 ஆம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பா.ம.க. கேட்டுக்கொண்டவாறு 27 ஆம் தேதி ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்தனர். அதன்படி நாளை மறுநாள் 14 ஆம் தேதி வண்டலூரில் நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடு இம்மாதம் 27 ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications