சென்னையில் ஒரே நாளில் 5 விபச்சார புரோக்கர்கள் கைது - 11 பெண்கள் மீட்பு - போலீஸ் அதிரடி
சென்னை: சென்னையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் விபசார தரகர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 11 இளம்பெண்கள் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னையில் மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னை வடபழனி துரைசாமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்திய சோதனையில் தரகர் விஜய அருணாச்சலம் என்பவரும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ஷிபாசினி என்ற பெண் தரகரும், சாலிகிராமத்தில் நாராயணன், வெங்கடேசன் ஆகிய தரகர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்ட வெளிமாநில இளம்பெண்கள் 9 பேர் மீட்கப்பட்டனர். இதேபோல, சென்னை புறநகர் பகுதியான குமணன் சாவடியில் தர்மலிங்கம் என்ற தரகரும் கைதானார். அவரால் சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண்கள் 2 பேரையும் போலீசார் மீட்டனர்.
மொத்தத்தில், போலீசார் நடத்திய விபச்சார தடுப்பு வேட்டையில் 5 விபசார தரகர்கள் கைது செய்யப்பட்டனர். 11 இளம்பெண்கள் மீட்கப்பட்டு அரசு மறு வாழ்வு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட தரகர்கள் இளவரசன், சத்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் தள்ள போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில், அவர்கள் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.