மனைவி போயிட்டார்.. இருக்கப் பிடிக்கலை.. ஜெயிலுக்குப் போவதற்காக கொலை செய்த குடிகாரர்!
சென்னை: சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர், தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து போன வருத்தத்தில், நன்றாக குடித்து விட்டு தனக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு கூலித் தொழிலாளியை கொன்று விட்டு கைதாகியுள்ளார்.
மனைவியைப் பிரிந்து வெளியில் சும்மா இருப்பதை விட ஜெயிலுக்குப் போய் இருக்கலாம் என்ற எண்ணத்தில் இப்படி தேவையில்லாமல் இந்தக் கொலையைச் செய்துள்ளார் இந்த குடிகார ஜான்சன்.
நட்புக்காக கொலை செய்வார்கள், கோபத்தில் கொலை செய்வார்கள்.. ஆனால் இப்படி குடித்து விட்டு தேவையில்லாமல் ஜான்சன் செய்த கொலையால் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளியின் குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது.

கன்னடபாளையம் ஜான்சன்
தாம்பரம் கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மனைவி கணவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார்.

சோகம் - குடி - கோபம்
இதனால் சோகமடைந்த ஜான்சன் வழக்கத்தை விட அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். மனைவியை நினைத்துப் புலம்பினார். என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாரே என்று மனைவியை நினைத்து நண்பர்களிடம் வருந்தினார். கோபமும் அடைந்தார்.

கொன்னுட்டு ஜெயிலுக்குப் போகலாம்
இப்படி தனியா புலம்பிக் கொண்டிருப்பதற்குப் பதில் யாரையாவது கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகப் போறேன் பாருங்க என்றும் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

கூலித் தொழிலாளி கொலை
இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராஜா என்ற 50 வயது கூலித் தொழிலாளைியை நோக்கிப் பாய்ந்து சென்ற ஜான்சன், அவரை கத்தியால் குத்திக் கொன்று விட்டார். ராஜா பரிதாபமாக உயிரிழந்து போனார்.

தாயைக் காத்து வந்த ராஜா
ராஜாவுக்கு மனைவி இல்லை. இறந்து விட்டார். அவரது வயதான தாயும், 10 வயது மகனும் மட்டுமே. இருவரையும் கணணும் கருத்துமாக பார்த்து வந்தார். தாயை அப்படி பார்த்துக் கொள்வாராம் ராஜா. தனது மகனையும் சிரமப்பட்டு நல்ல பள்ளிக் கூடத்தில் படிக்க வைத்து வந்தார். இப்போது அத்தனையும் குடிகார ஜான்சனால் பறி போய் விட்டது.
தேவையில்லாமல், இப்படி மடத்தனமாக நடந்த இந்தக் கொலையால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications