17 வயதில் 2 மாணவர்கள்... சீரழிந்து போன 15 வயது மாணவியின் வாழ்க்கை!
நெல்லை: நெல்லை அருகே 17 வயதுடைய 2 மாணவர்கள் சேர்ந்து, 10வது வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர வைத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அக்கிரமத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான மோசஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று மெஸ்ஸாக்குக்குப் போன் செய்துள்ளார் அந்த சிறுமி. அப்போது தனது வீட்டுக்கு அருகே ஒரு இடத்தைக் கூறி அங்கு வருமாறு கூறியுள்ளார் மோசஸ்.

மாணவியும் தனது வீட்டில் பொய் சொல்லி விட்டு அங்கு போயுள்ளார். அங்கு மோசஸுடன், மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நவீன், இவர் ஆட்டோ டிரைவர். இன்னொருவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டது). பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். மோசஸ் மற்றும் ஜான்சனுக்கு வயது 17 ஆகிறது.
அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து கிளம்ப முயன்றார். இதைப் பார்த்த மூவரும் அவரை மடக்கிப் பிடித்து தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். அதிர்ச்சி, அவமானம், வேதனையுடன் வீடு திரும்பிய மாணவி தனது தாயாரிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸுக்குப் போனால் அவமானமாகி விடுமே என்று பயந்து சொல்லாமல் விட்டு விட்டனர்.
ஆனால் அடுத்த நாள் காலையில் மனதை தேற்றிக் கொண்ட அவர்கள் மோசஸின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து நடந்ததைக் கூறினர். மோசஸை, தங்களது மகளுக்குக் கட்டி வைக்குமாறு கோரினர். ஆனால் மோசஸ் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
புகாரைப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக மோசஸைக் கைது செய்தனர். தொடர்ந்து ஜான்சும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட ஆட்டோ டிரைவர் நவீனுக்கு வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications