வீதி வீதியாக புகுந்து போலீசார் தடியடி… சாலையில் உள்ள பொதுமக்களையும் விட்டு வைக்காத போலீசார்
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் பகுதிகளில் அவரவர் வீட்டு வாசலில் நிற்பவர்களைக் கூட விட்டு வைக்காமல் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளுக்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொ
சென்னை: பெரும் பதற்றம் நிறைந்த பகுதியாக ராயப்பேட்டையும் திருவல்லிக்கேணியும் மாறிவிட்டன. போலீசார் விசில் ஊதும் சத்தமும், தடியடி நடத்தும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. வீதி வீதியாக போலீசார் புகுந்து பொதுமக்களை விரட்டி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
மெரினா கடற்கரை பகுதியையொட்டிய பகுதிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. டாக்டர் நடேசன் சாலை, லாயிட்ஸ் சாலை, வி.எம். தெரு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வீதி வீதியாக நுழைந்து போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் தடியடி நடத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

அவ்வை சண்முகம் சாலையில் உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்றுப் பகுதிகளில் போலீசார் வீடு வீடாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்தப் பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் யாரும் இல்லை என்று பொதுமக்கள் கூறினாலும், அவர்களையும் போலீசார் தடியடி நடத்தி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் இந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. குழந்தைகள், பெண்கள் என அனைவரும் வீட்டிற்குள் பயந்து வீட்டிற்கு ஓடி தாழிட்டுக் கொண்டனர். கூச்சல், இரைச்சல், விசில் சத்தம் என ராயப்பேட்டை போராட்ட பூமி போல காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications