குற்றாலத்தில் போலீசார் அட்டகாசம்.. சுற்றுலா பயணிகள் வேதனை
தென்காசி: குற்றாலம் அருவி பகுதிகளில் பெண்கள் குளிக்கும் பகுதியில் ஆண் போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெண் சுற்றுலா பயணிகள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் குற்றாலம். இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் களை கட்டும். இங்கு சீசனை அனுபவிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
இங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சீசன் காலங்களில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதுவதும் போதிய போலீசார் இல்லாமல் அருவிகளில் குளிக்க வரும் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறை திணறுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், ஐந்தருவி, புளியரை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது, இம்மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் தற்போது விடுமுறைக் காலம் என்பதாலும் கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்கள் அருவியை நோக்கி குளிக்க படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இங்கு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதல் ஆண் போலீசாரை குற்றாலம் காவல்துறை கண்காணிக்க பணியமர்த்தியுள்ளது. மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண் போலீசாரை பெயரளவுக்கு நியமித்து விட்டு ஆண் போலீசார் அங்கே பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெண் சுற்றுலா பயணிகள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.