சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி: தந்தை மகன் உட்பட ஆறு பேர் கைது
மானாமதுரை: மானாமதுரையில் கண்ணாடிக்கல்லை வைரக்கல் என்று கூறி சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த போலி தங்க பிஸ்கெட்டுகள், போலி கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மானாமதுரையில் பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளை நோட்டமிடும் இக்கும்பல் இருப்பதிலேயே நகை, பணத்துடன் ஏமாறும் தோற்றத்துடன் உள்ளவர்களை தேர்வு செய்வார்கள். கும்பலைச் சேர்ந்த ஒருவரே சாதாரண பயணி போல அவரது பக்கத்தில் போய் பணக்கார தோற்றத்தில் நின்று கொள்வார்.
கும்பலைச் சேர்ந்த மற்ற இருவர் அவரிடம் போய் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் தங்களிடம் வைரக்கல் உள்ளதாகவும், பலலட்சம் பெறுமானமுள்ள இந்த வைரக்கல்லை வங்கியில் அடமானம் வைக்க முடியவில்லை, மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் பணமில்லை என்று பேரம் பேசுவார்கள்.
பக்கத்தில் உள்ள அவர்களது கும்பலைச் சேர்ந்தவர்களே அந்த கல்லை பேரம் பேசி பணம்,கழுத்தில் கையில் போட்டிருக்கும் தங்க பொருட்களை கொடுத்து வாங்குவார்கள், உடனே அருகில் உள்ள திருவாளர் பொது ஜனமும் அந்த கல்லை பணம், தங்க நகை கொடுத்து வாங்குவார். பின் என்ன கும்பல் விடு ஜுட்தான். இனி அடுத்த ஊர், அடுத்த ஏமாளி என பறந்து விடும்.
இப்படி மானாமதுரை அருகே பெரியகோட்டை கோடாங்கிபட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அழகு,56. மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்த அய்யங்காளை மகன் முருகேஷ்பாண்டி,35. இவர்கள் இருவரும் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது சிலர் தங்களிடம் வெளிநாடு வைரக்கல் இருப்பதாகவும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கல் இது என்றும் ஊருக்கு போக காசில்லாததால் விற்பனை செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர். அதனை கேட்ட அழகு அவர்களிடம் தற்போது பணமில்லை என கூற தங்கநகைகள் இருந்தாலும் அதற்கு ஈடாக தாருங்கள் என பேரம் பேசியுள்ளனர்.
அவர்களின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்ட அழகு, மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் அவர்களை பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் கண்ணாடி கல்லை வைரக்கல் என கூறி மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
விசாரணையில் வேலூர் மாவட்டம் புளியம்புத்தூரைச் சேர்ந்த ஷெரீப் மகன் சாகுல் ஹமீது,56 தலைமையில் இக்கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. ஜாபர்ஷெரீப் மகன் ஜாஹிர் உசேன், 40 இப்ராஹிம் மகன் சேர்கான்,55 முகமது சலீம் மகன் செய்யது முகைதீன், 39 சேர்கான் மகன் பாட்ஷா,27 மற்றும் கார் டிரைவராக வந்த சுப்ரமணி மகன் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்த ஏழரை பவுன் நகைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.