எல்லா மாடல் துப்பாக்கியும் கிடைக்கும்... கள்ளத்துப்பாக்கி விற்ற போலீஸ்காரரின் பரபரப்பு வாக்குமூலம்
திருச்சியில் போலீஸாரிடம் பிடிபட்ட கள்ளத்துப்பாக்கி விற்பனை கும்பல் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளது.
திருச்சி : கள்ளத்துப்பாக்கி விற்றதற்காக கைது செய்யப்பட்ட கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளன. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
திருச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளத்துப்பாக்கிகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்ட பரமேஸ்வரன் போலீஸ்காரர் என்று தெரியவந்ததை அடுத்து அவரிடம் போலீஸார் திவீர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பையில் இருந்து கள்ளத்துப்பாக்கிகள்
இது தொடர்பாக பரமேஸ்வரன் அளித்துள்ள வாக்குமூலத்தில், சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும் என்கிற ஆசையில் இந்த வியாபரத்தை செய்து வந்தேன். முதலில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆதி என்பவர் மூலமாக மும்பையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் அறிமுகமானார். கள்ளத் துப்பாக்கிகளை அவரிடம் சென்றுதான் நான் வாங்கினேன். பின்னர் இந்த துப்பாக்கிகளை சென்னைக்கு ரெயிலில் கடத்தி வந்தேன். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே இந்த துப்பாக்கிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு காய் நகர்த்தினேன்.

நிறைய துப்பாக்கிகள் விற்பனை
வசதியாக இருக்கும் என்பதால் திருச்சியில் வைத்து விற்பனை செய்ய முடிவு செய்தோம். இந்தத் துப்பாக்கிகள் இரண்டையும் மும்பையில் இருந்து ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாங்கி வந்தேன். நல்ல லாபத்தில் விற்பனை செய்வதற்காக காத்திருந்தோம். ஆனால், அதற்குள் போலீஸிடம் சிக்கிக் கொண்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி வியாபாரம் செய்து வருகிறோம். எங்கனால் அனைத்து வித துப்பாக்கிகளையும் வாங்கித்தர முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

துப்பாக்கி விற்பனை குறித்த தகவல்
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைத்து உள்ளன. சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரோடு சேர்ந்து துப்பாக்கி வியாபாரம் செய்து வந்த பரமேஸ்வரன், பல துப்பாக்கிகளை விற்க உதவியாக இருந்து உள்ளார். இதற்கு ஆட்டோ ஓட்டி வந்த தனது உறவினரான நாகராஜையும் பரமேஸ்வரன் உதவியாக வைத்துக் கொண்டார். இவர்கள் துப்பாக்கி தேவைப்படுகிறவர்களுக்கு அந்த ஊருக்கே சென்று விற்று வந்துள்ளனர். இவர்களுடன் பிடிபட்ட பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த சிவா, சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர்
சிவா பைனான்ஸ் செய்த பணம் பல இடங்களில் இருந்து திரும்பி வரவில்லை. இத்தொழிலில் தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்க வந்த போது பரமேஸ்வரன், நாகராஜூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களாக பரமேஸ்வரன் சென்னை, கோவை, நாகை, மதுரை உள்பட பல இடங்களில் கள்ள துப்பாக்கிகளை விற்று வந்துள்ளார். கள்ளத் துப்பாக்கி விற்று வந்த பரமேஸ்வரன் அடிக்கடி குடித்து விட்டு ரகளை செய்தது, ரவுடிகளுடன் சேர்ந்து அடிதடியில் ஈடுபடுவது என இருந்து வந்துள்ளார். இதற்காக ஒருமுறை போலீஸ் பணியில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.

பரபரப்பு வாக்குமூலம்
மீண்டும் பணியில் சேர்ந்து தொழிலை யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் கள்ள நோட்டு கும்பலுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். மும்பை, உள்பட வெளி மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்து ரவுடிகள், கடத்தல்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தேவைப்படுவோர்களுக்கு விற்று வந்துள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. கைதான பரமேஸ்வரன், நாகராஜ், சிவா ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications