பல லட்சம் ரூபாய் லஞ்சம்: மாஜி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சின்னையா மீது போலீசில் புகார்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சின்னையா மற்றும் ஆலந்தூர் எம்எல்ஏ வெங்கட்ராமன் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றவர் செந்தில் பாலாஜி. யாரும் அசைக்க முடியாத வகையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார். ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாகவும் செந்தில் பாலாஜி இருந்து வந்தார்.

மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவி என அடுத்தடுத்து அதிரடியாக செந்தில் பாலாஜி முன்னேற்றம் கண்டவுடன் அதிமுக நிர்வாகிகளை ஓரம்கட்டிவிட்டு தமது குடும்பத்தினரை வளையமாக்கிக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.
மேலும் அதிமுக உள்கட்சி தேர்தலில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்க செந்தில் பாலாஜி முயற்சித்தாக அதிமுக எம்பி ஒருவரே கட்சி மேலிடத்துக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி உத்தரவால் அமைச்சர் பதவியில் இருந்தும் கரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் செந்தில் பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது 50க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் போன்ற பணிகளுக்காக 3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பலரிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றியதாக தெரிவித்துள்ளனர்.
சின்னையா மீதும் புகார்:
தமிழக கால்நடைத்துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் டி.கே.எம்.சின்னையா. இவரும் ஆலந்தூர் எம்எல்ஏ வி.என்.பி. வெங்கட்ராமனும் கட்சி பதவிகள் வாங்கி தருவதாக அதிமுக பிரமுகர் எம்.சரவணன் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் பணமும், நகைகளும் வாங்கி மோசடி செய்துவிட்டதாக இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications