கால்பந்தாட்ட வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது போலீசில் புகார்
சென்னை: நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக கூறி அடையார் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கால்பந்து விளையாட்டு வீரர் பிரேம் குமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை, பாரிமுனையைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே செல்லும்போது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்து நின்றது. இதை சற்றும் எதிர்பாராத பிரேம்குமார், மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார்.
ஆனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் பின்பகுதியிலும், மோட்டார் சைக்கிளின் முன்பகுதியிலும் லேசான சேதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்த காரை ஓட்டி வந்த பெண், பிரேம்குமாரிடம் கார் சேதமடைந்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
பிரேம்குமாரும், அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இருவரும் சாலையின் நடுவில் நின்று கொண்டு பிரச்னை செய்ததால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் கூட்டம் கூடியது. இதனிடையே அங்கு காரில் வந்த நடிகர் சூர்யா, இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் பிரேம்குமாருக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து விபத்தின் போது, நடிகர் சூர்யா பொதுமக்கள் முன்னிலையில் தன்னை தாக்கியதாக சென்னை சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார். சென்னை அடையாறு அருகே காரில் சென்ற பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டதாகவும், அந்த இளைஞர்களிடம் இருந்து பெண்ணை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின்போது இளைஞர்களை தான் தாக்கவில்லை என்றும், கூட்டம் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும் சூர்யா கூறியுள்ளார்.