அவசரத்திற்கு கூட லீவு கிடையாது.. போதும்ப்பா இந்த போலீஸ் வேலை.. வைரலாகும் கான்ஸ்டபிள் பேச்சு
Recommended Video

சென்னை: அவசரத்திற்கு கூட விடுமுறை அளிக்காத காவல்துறை உயர் அதிகாரிகளால் மனம் நொந்து, வேலையை ராஜினாமா செய்வதாக ஒரு போலீஸ்காரர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது.
பாரதி என்ற பெயருள்ள அந்த போலீஸ்காரர் பேஸ்புக்கில் பேசி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பேசும்போது அவர் காவல்துறை சீருடையில்தான் காணப்படுகிறார்.
கலங்கிய கண்ணுடன் அவர் காவல்துறையில் எப்படியெல்லாம் போலீஸ்காரர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.

மகனுக்கு அடிபட்டது
மதுரையில் இருந்து வந்து 10 வருடமாக சென்னையில் வேலை பார்த்து வந்தேன். சிறு கஷ்டங்கள் வந்தாலும் அனுசரித்து சென்றேன். ஆனால், சமீபத்தில், ஊரில் மகனுக்கு கீழே விழுந்து அடிபட்டது. காலில் நீர் கோர்த்துக்கொண்டது.

விடுமுறை விண்ணப்பம்
நிலைமை கைமீறி போனதால், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எனவே நான் பணியில் இருந்த பள்ளிக்கரணை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை பார்த்து விடுப்புக்கு விண்ணப்பித்தேன். இன்னும் ஒரு வாரம் அறுவை சிகிச்சைக்கு அவகாசம் இருப்பதால் அப்போது பார்க்கலாம் என கூறியிருந்தார். நானும் நம்பிக்கையோடு இருந்தேன்.

பொய் என குற்றச்சாட்டு
ஆனால், அறுவை சிகிச்சை நாள் நெருங்கியபோது விடுமுறை கேட்டதற்கு, விடுமுறை தரமுடியாது என கூறிவிட்டார். ஊரில் இருந்து எனது மகன் போன் செய்து அப்பா என்னுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தான். ஆனால் இன்ஸ்பெக்டரோ நான் பொய் சொல்கிறேன் என கூறி விடுமுறை அளிக்கவில்லை.

துணை கமிஷனர் வரை முயற்சி
எனவே மடிப்பாக்கம் உதவி கமிஷனரை பார்த்து விடுமுறை வேண்டும் என்று கேட்டேன். அவர் 2 நாள் மட்டும் விடுமுறை தந்து அதற்குள் போய் வர வேண்டும் என்றார். ஆனால் மதுரை வரை சென்று திரும்பவே 3 நாள் ஆகிவிடும். ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என்று கேட்டேனந். அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து துணை கமிஷனரை பார்க்க அவர் அலுவலகம் சென்றேன். ஆனால், விடுமுறைக்காகவெல்லாம் டிசியை பார்க்க அனுமதிக்க முடியாது என கூறி என்னை அவரை சந்திக்கவே விடாமல் போலீசார் விரட்டிவிட்டனர்.

சம்பாதிப்பது யாருக்காக?
எனது கஷ்டத்தை யாருமே புரிந்துகொள்ளவில்லை. நாம் சம்பாத்தியம் செய்வதே நமது பசங்களுக்காகத்தான், குடும்பத்திற்காகத்தான். அவர்களுக்கு ஒன்று என்றபோது கூட பார்க்க முடியாவிட்டால் இந்த வேலை எதற்கு. பேசாமல் இந்த வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போய்விடலாம், விவசாயம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம், மளிகைக் கடை வைக்கலாம் என்று நினைத்தேன். எனவேதான் இந்த வேலையை விட்டு செல்கிறேன் என்று பாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications