மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் மேல் பறந்த விமானம் வதந்திதான்- நெல்லை எஸ்.பி விக்ரமன்
நெல்லை: மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ கிரையோஜெனிக் மையத்தின் மேலே குட்டி விமானம் பறந்ததாகவும், கிளைடர் விமானம் பறந்ததாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் கிளப்பிவிடப்பட்ட வதந்தி எனவும், தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி விக்ரமன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் இஸ்ரோவின் கிரையோஜெனிக் டெஸ்டிங் மையம் அமைந்துள்ளது.

இந்த மையத்தின் மேலே கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தொடர்ந்து கிளைடர் விமானம் பறந்ததாக பொதுமக்களிடம் தகவல் பரவியது. மேலும், அது மர்மான பொருளாக தெரிந்ததாகவும் வதந்திகள் பரவின. இதனால் இஸ்ரோவை யாராவது உளவு பார்க்க விமானம் மூலம் வந்து சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து நெல்லை மாவட்ட டி.ஐ.ஜி அன்பு, எஸ்.பி.விக்ரமன் ஆகியோர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கிட்டதட்ட 200 போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் மதுரை பிரிவினர், வனத் துறை அலுவலர்கள் இணைந்து 5 குழுக்களாகப் பிரிந்து இஸ்ரோ மையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வியாழக்கிழமையன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக நேற்று நெல்லை மாவட்ட எஸ்.பியான விக்ரமன், "மகேந்திரகிரி மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும் டெலஸ்கோப், ரேடார் கருவி ஆகியவற்றின் மூலம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் சோதனை செய்ததில், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ஆகாய விமானங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. எனவே கிளைடர் விமானங்கள் பறந்தது என்பது வெறும் வதந்தி என தெளிவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications