30 பவுன் நகைப்பையை ஹோட்டலில் மறந்த குடும்பம்: ஒரு பவுனும் குறையாமல் திரும்ப கிடைத்த 'அதிசயம்'
திருத்தணி: தாம்பரத்தில் ஒரு குடும்பத்தினர் ஹோட்டலில் மறந்து வைத்த 30 பவுன் நகையை போலீஸார் உடனடியாக கண்டறிந்து ஒப்படைத்துள்ளனர்.
தாம்பரத்தைச் சேர்ந்த சுகுமார் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஊழியர். தன்னுடைய குடும்பத்துடன் உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார்.
திருமணம் முடிந்ததும் நேற்று இரவு வீடு திரும்பிய அவர்கள் திருத்தணி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர்.
உணவு உண்ணும் மும்முரத்தில் 30 பவுன் உள்ள நகைப்பையை அங்கேயே வைத்து விட்டு மறந்துவிட்டனர். இதனைப் பற்றி தாம்பரம் வந்தடைந்த பின்பு தெரிந்து கொண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருத்தணி போலீசாரிடம் புகார் செய்தனர்.
இதனையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் சாப்பாட்டு மேஜைக்கு அடியில் நகைப்பை இருந்தது. அந்நகைப்பை விசாரணக்குப் பின்பு, சுகுமார் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு பவுனும் குறையவில்லை.
இதில் மிகவிரைவாக செயல்பட்டு நகைகளை கண்டறிந்த போலீசாருக்கு அக்குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications