எஸ்வி சேகர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஏன் போலீஸ் தயக்கம்? திடுக் தகவல்கள்
எஸ்வி சேகர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம் காட்டுவதாக பத்திரிக்கையாளர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: எஸ்வி சேகர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம் காட்டுவதாக பத்திரிக்கையாளர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் அந்த பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கோரினார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவரான எஸ்வி சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். பெண் பத்திரிக்கையாளரை தரக்குறைவாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் எஸ்வி சேகர்.
பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
அவரது அந்த அநாகரீகமான பதிவுக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டையும் பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடவடிக்கை எடுக்கவில்லை
இந்நிலையில் எஸ்வி சேகர் மீது பல்வேறு இடங்களில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த புகார் மீதும் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
போலீஸ் தயக்கம்
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீஸ் தயக்கம் காட்டி வருகிறது. எஸ்.வி.சேகர் மீது பல்வேறு புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக அரசும் தயக்கம்
எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா தலைமைச் செயலாளராக இருப்பதால் கைது செய்ய போலீசார் அச்சப்படுகின்றனர் என்றும் பத்திரிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறது என்றும் கூறப்படுகிறது.
வீட்டுக்குள் முடக்கம்
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமின் கோர எஸ்.வி.சேகர் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்புக்கு பயந்து எஸ்வி சேகர் 2-வது நாளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார்.
முன்ஜாமீன் பெற்ற பின்
வீட்டின் மீது கல்வீசப்பட்டதால் வீட்டை விட்டு வெளியே வர எஸ்.வி.சேகர் அச்சப்படுகிறார். முன்ஜாமின் பெற்றப்பிறகே எஸ்.வி.சேகர் வெளியே வருவார் என தகவல் தெரிவிக்கின்றன.
இன்றும் போராட்டம்
எஸ்.வி.சேகரை கைது செய்யும் வரை போராட்டத்தைத் தொடர ஊடகத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஊடகவியலாளர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
நடிகர் சங்கம் கண்டனம்
நேற்று ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும், மீடியாவில் பணியாற்றும் பெண்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.