சுவாதி கொலை: ராம்குமாரின் பெற்றோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
சென்னை: சுவாதியை கொன்ற ராம்குமாரின் பெற்றோரிடம் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார் சுவாதி. 10 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி 9 நாட்களில் கொலையாளியை கைது செய்துள்ளனர்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிர் நேற்று நள்ளிரவில் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. போலீசார் பேச மருத்துவர்கள் தடை விதித்தனர்.
மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராம்குமார் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் செய்தியாளர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
ராம்குமாரின் தந்தை பரமசிவன், தாய் புஷ்பம், அக்காள் மதுபாலா, காளீஸ்வரி ஆகியோரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமசிவன் தென்காசியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மதுபாலா தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மற்றொரு அக்கா காளீஸ்வரி மகளிர் சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாதியை கொன்ற ராம்குமார் எப்போது சொந்த ஊருக்கு வந்தார்? அவர் சுவாதியை கொலை செய்தது குறித்து ஏதாவது கூறினாரா? என அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications