சுவாதி கொலை வழக்கு: நண்பர் பிலால் சித்திக்கிடம் போலீசார் மீண்டும் விசாரணை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட இளம் பெண் சுவாதியின் நண்பர் பிலால் சித்திக்கிடம் போலீசார் நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

ராம்குமாரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் போலீசாருக்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
சுவாதி கொலை வழக்கில் அவரது ஆண் மற்றும் பெண் நண்பர்களிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சுவாதியின் ஆண் நண்பரான முகமது பிலாலிடம் பல முறை போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து இருந்தபோதும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து முகமது பிலாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சுவாதி நண்பர் பிலால்
புதன்கிழமை இரவு திடீரென முகமது பிலாலை காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி இரவு 8.30 மணியளவில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் ஆஜரானார். அவரிடம் போலீசார் சுவாதி கொலை வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குற்றப்பத்திரிக்கை
இந்த விசாரணை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. 2 மணி நேர விசாரணைக்கு பிறகு முகமது பிலாலை அனுப்பி விட்டதாக நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் உள்ளதால் அதற்கு தேவையான ஆதாரங்கள் குறித்தும் சுவாதி தொடர்பான தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்
ஆகஸ்ட் 8ம்தேதி ராம்குமாரை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் நடக்க வைத்து போலீசார் வீடியோ பதிவு எடுக்க உள்ளனர். அப்போது பிலாலையும் உடன் வைத்து அவரிடமும் சில தகவல்களை பெற உள்ளனர். அதற்காக பிலாலை நேரில் வர வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு நடைபெற்ற 2 மணி நேர விசாரணையில் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தனர்.
ராம்குமார் கையில் காயங்கள்
இதனிடையே ராம்குமாரின் கையில் இருக்கும் காயங்கள் குறித்து அரசு மருத்துவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் வலது கையில் உள்ள காயங்கள் உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகளால் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவு
ரத்தமாதிரி எடுக்க ராம்குமாரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவரது கையில் வெட்டுக்காயம் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், அதுபற்றிய தகவல் வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் எனக் கருதி நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ராம்குமாரின் கையிலிருந்த காயங்கள் குறித்து ஆய்வு செய்து தகவல் அளிக்கும்படி அரசு மருத்துவர்களிடம் நீதிமன்றம் கேட்டிருந்தது. இதனையடுத்தே மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
கையெழுத்து கைரேகை
ராம்குமாரிடம் கையெழுத்தும், கைரேகையும் பதிவு செய்வதற்கான மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், மனு மீது இந்த மாதம் 8ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எழும்பூர் நீதித்துறை நடுவர் கோபிநாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications