ராஜஸ்தான் பெண்களிடம் சில்மிஷம் செய்து சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரர் கைது!
கிருஷ்ணகிரி: ராஜஸ்தான் பெண்களை சில்மிஷம் செய்த விவகாரத்தில் மாட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி பிச்சை எடுத்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஏட்டு வடிவேல் என்பவர் அந்த பெண்களை பேருந்து நிலைய போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வைத்து பாலியல் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து போலீஸ் ஏட்டு வடிவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் வாசுகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் போலீஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த விஷயத்தை மறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.,கவுல், சத்தியநாராயணன் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனடிப்படையில் நடைபெற்ற விசாரணை முடிவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு வடிவேலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்து கிருஷ்ணகிரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற பொறுப்பு நீதிபதி ராஜ்குமார் முன் ஆஜர் செய்து ஓசூர் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications