காதலியைக் கொன்று உடலைக் கடத்த முயன்ற தினேஷ்.. 20 நாளாகியும் பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
சென்னை: காதலியைக் கொன்று, அவரது உடலைக் காரில் கடத்த முயன்ற போது அக்கம்பக்காத்தாரிடம் சிக்கிக் கொண்ட வங்கி ஊழியர் தினேஷ் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் போலீசார் அவரைப் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனி அடுக்குமாடிக் குடியிருப்பில் பெற்றோரோடு தங்கி இருந்தவர் தினேஷ். வங்கி ஊழியரான தினேஷ் சூளையைச் சேர்ந்த அருணா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த மாதம் பெற்றோர் இல்லாத போது தனது வீட்டிற்கு அருணாவை அழைத்து வந்த தினேஷ், காதல் தகராறில் அவரைக் கொன்று விட்டார். பின்னர், உடலைக் காரில் கடத்த முயன்றபோது அக்கம்பக்கத்தாரிடம் மாட்டிக் கொண்டார். ஆனால் போலீசார் வருவதற்குள் தப்பி ஓடி தலைமறைவான அவர், 20 நாட்களுக்கு மேல் ஆகியும் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
காதலிக்கும் இளம்பெண்கள் மத்தியில், அருணாவின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருணாவின் பெற்றோரும் தற்போது நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். கொலையாளி தினேஷ் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது மேலும் அவர்களது வேதனையை அதிகப் படுத்தியுள்ளது.
இதையடுத்து கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து அவர்கள் கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது கமிஷனர் ஜார்ஜ், குற்றவாளி தினேசை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தினேசை கைது செய்து விடுவோம் என்றும் உறுதி அளித்தார். இதனால் அவர்கள் ஓரளவுக்கு மன நிம்மதி அடைந்துள்ளனர்.
அருணா கொலை செய்யப்பட்டு இன்றோடு 23 நாட்கள் ஆகிறது. ஆனால் தினேசை பற்றி எந்தவித தகவலும் கிடைக்காமல் போலீசார் தவித்து வருகிறார்கள். அருணாவைக் கொன்றபின் மருத்துவமனைக்கு சென்று தனது தாயைச் சந்தித்த தினேஷ், தனது செல்போனை அவரது கைப்பையில் போட்டு விட்டுச் சென்று விட்டார்.
இதனால் அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதில் போலீசுக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருப்பதி அல்லது திருத்தணியில் தினேஷ் பதுங்கி இருக்கலாம் என்று போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் தினேஷ் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் தனிப்படை போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.
தலைமறைவாக உள்ள தினேசை பிடிப்பதற்காக 5 தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications