திருவண்ணாமலையில் சர்ச்சை: பக்தர்களை விரட்டியடித்து விட்டு பரணிதீபம் தரிசித்த போலீஸ் அதிகாரிகள்
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வந்த காவல்துறை அதிகாரிகள் பலரும், பக்தர்களை விரட்டியடித்து விட்டு பரணி தீபம் தரிசனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட சம்பவம் அண்ணாமலையார் பக்தர்களை முகம் சுளிக்கவும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் தலங்களில், அக்னித்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் இன்று மாலை ஏற்றப்பட உள்ளது. இதைக் காண உள்ளூர், தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அண்ணாமலையார் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னிதியில் இன்று ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர்.
பரணி தீபம் ஏற்றுவதை காண வந்த முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அண்ணாமலையார் பக்தர்கள் பலர் மூலவர் சன்னதி அருகே கூடி இருந்தனர். அப்போது, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த ஐ.ஜி. மற்றும் அவரது தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார், திடீரென மூலவர் சன்னதி அருகே வந்தனர். அங்கு கூட்ட நெரிசல் இருந்ததால், உடனே அங்கிருந்த பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பிடித்து இழுத்து வெளியேற்றிவிட்டு போலீசார் பரணி தீபம் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த போலீஸ் ஐ.ஜி. மற்றும் போலீசாரின் இந்த செயல்பாடுகளால் அண்ணாமலையார் பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், முகம் சுளித்தபடியே பரணி தீப தரிசனத்தை காண முடியாத மன வேதனையடைந்தனர்.
போலீசாரின் செயல்பாடுகளை அண்ணாமலையார் எப்படி எடுத்துக்கொள்வாரோ அவருக்கே வெளிச்சம்!












Click it and Unblock the Notifications