ஜல்லிக்கட்டு போராட்டம்.. மெரினாவில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேரில் வரவேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் மெரினா பீச்சில் போராட்டம் நடத்துவோரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை மெரினா பீச் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை சுமார் 100 பேருடன் தொடங்கிய இப்போராட்டம் இப்போதுள்ள நிலைமையில் சுமார் 4000 என்ற அளவில் அதிகரித்துள்ளது. மின்சாரத்தை துண்டித்து சிவில் அமைப்புகள் அடாவடி செய்தாலும் கூட, செல்போன் டார்ச் மூலமாக போராட்டத்தை தொடருகிறார்கள். இதில் பெண்களும் சிலர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மெரினா பகுதியில், செல்போன் ஜாமர்கள் பொருத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் வாகனங்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. எனவே நள்ளிரவு நேரத்தில் போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரா என்ற கேள்விக்குறி எழுந்தது.
இருப்பினும் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இருப்பினும் முதல்வர் அறிக்கையை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் அதுவரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications