100 ரூபாய்க்கு போலீஸ் தொப்பியை அடமானம் வைத்து குடித்த குடிகார ஏட்டு!
சேலம்: குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் தனது தொப்பியை ரூ100க்கு அடமானம் வைத்த மது அருந்திய ஏட்டைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள டாஸ்மாக் கடைக்கு கடந்த வாரம் போலீஸ் சீருடையுடன் மது அருந்தச் சென்றுள்ளார் ஏட்டு ஒருவர். போதை தலைக்கேறிய நிலையில், மது அருந்த பணம் பத்தாமல், பாரிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
அப்போது, ரயில்வே ஸ்டேஷன் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டுச் சென்றுள்ளார் ஏட்டு. போலீஸ் உடையுடன் காசு கேட்டு ஏட்டு நிற்பதைக் கேட்டு மிரண்டுப் போன அந்நபர் வேறு வழி இல்லாமல், தனது கையில் இருந்த 100 ரூபாயை ஏட்டுவிற்குக் கடனாகக் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட ஏட்டு அதற்குப் பதிலாக தனது தொப்பியை அடமானமாகக் கொடுத்துள்ளார். பின், மீண்டும் மது அருந்தச் சென்று விட்டார் ஏட்டு. சிறிது நேரம் தொப்பியுடன் காத்திருந்த அந்நபர், அந்த தொப்பியை ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் அருகே போட்டு விட்டு சென்றார்.
போலீஸ் தொப்பி ஒன்று அநாதரவாகக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் அதனை எடுத்து, அருகில் இருந்த சைக்கிள் ஸ்டாண்டில் வைத்திருப்பவர்களிடம் கொடுத்துள்ளனர். அந்த தொப்பியின் உள்பக்கம் வெள்ளை கலரில் 22 என்ற நம்பர் எழுதப்பட்டுள்ளது.
தொப்பியை 100க்கு அடமானம் வைத்த போலீஸ் ஏட்டு யார்? என, டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications