ஜல்லிக்கட்டு உரிமைப் போர்: அலங்காநல்லூரில் கைதான 40 பேர் மட்டுமே விடுதலை- தொடரும் பதற்றம்!!
ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட 35 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலையில் கைது செய்யப்பட்ட 240 பேரில் 5 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அலங்காநல்லூரில் பதற்றம் நீடித்து வருகிறது
அலங்காநல்லூர்: காளைகளை அவிழ்த்துவிட்டதாக கைது செய்யப்பட்ட 35 பேரை மட்டும் போலீசார் விடுதலை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விடிய விடிய போராட்டம் நடத்திய 240 பேரில் 5 பேரை மட்டுமே போலீசார் விடுதலை செய்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் பதற்றம் நிலவி வருகிறது.
பொங்கல் திருவிழாவின் போது, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி மாபெரும் போராட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்தப் போராட்டம் விடிய விடிய 21 மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை, திருச்சி, புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து காளைகளை அவிழ்த்து விட்டதாக கைது செய்யப்பட்ட 35 பேரை மட்டும் போலீசார் விடுதலை செய்துள்ளனர். இன்று காலைவரை போராட்டம் நடத்திய 240 பேரை இன்னும் போலீசார் விடுதலை செய்யவில்லை. இதனால் அவர்களின் நிலை என்ன என்று அலங்காநல்லூரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போலீசார் தரப்பில், கைது செய்யப்பட்ட அனைவரும் அவரவர்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்வதை உறுதி செய்தால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களும், மறியலில் ஈடுபட்டுள்ளவர்களும், எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்களோ அதே இடத்தில் தான் அவர்களை கொண்டு வந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். இதனால் அலங்காநல்லூரில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட 240 பேரில் 5 பேரை போலீசார் விடுதலை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications