சென்னையில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல் - தலையை தேடும் போலீஸ் - கொலையாளி சைக்கோவா?
சென்னை முகப்பேர் பகுதியில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடலின் பாகங்களை சேகரித்து வரும் போலீசார் தலையை தேடி வருகின்றனர்.
சென்னை: முகப்பேர் பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வருகின்றன. தலையையும், கைகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையம் அருகில் முகப்பேர் மேற்கு 3-வது பிளாக் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் உடல் கிடந்தது.
ஒரு சாக்குப் பையில் மூட்டையாக கட்டப்பட்டு இருந்தது. துப்புரவு பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் அதனை மனித உடல் என்று தெரியாமல் குப்பை லாரியில் கொண்டு சென்றனர்.
அப்போது சாக்குப் பை கிழிந்து ரத்தம் வடிந்த நிலையில் மனித உடல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி நொளம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து உடல் உறுப்புகளைக் கைப்பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
துண்டு துண்டாக பாகங்கள்
ஆண் ஒருவரை கொலை செய்து உடலை மட்டும் தனியாக பார்சல் செய்து சாக்கடையில் வீசியுள்ளனர். தலை, 2 கை, 2 கால்கள் ஆகியவற்றை வெட்டி அறுத்து வேறு எங்கோ வீசிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் உடல் பாகங்கள்
கொலை செய்யப்பட்டது ஆண் என்பதுமட்டும் தான் தெரியவந்துள்ளது. அவர் யார்? எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. கொலை செய்யப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் என்று கூறப்படுகிறது. அவர் அணிந்து இருந்த சட்டை காலரில் தூத்துக்குடி டெய்லர் பெயர் இருந்தது. அதனால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தலையும் கைகளும் எங்கே?
வெட்டப்பட்ட உறுப்புகள் கிடைத்தால்தான் கொலையுண்டவர் யார் என்று அடையாளம் காண முடியும். அதனால் கை, கால், தலை ஆகியவற்றை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். போலீஸ் மோப்ப நாய் மற்றும் தனிப்படை அமைத்து துண்டிக்கப்பட்ட மற்ற உறுப்புகளை தேடி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
போலீசார் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள பதிவுகளையும் வாங்கி சென்றுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகள் குடியிருக்கும் அந்த பகுதியில் தலையில்லாத மனித உடல் வீசப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலையானவரின் கால்கள்
இன்று காலை சோதனையில் ஈடுபட்டபோது முகப்பேர் மேற்கு 6-வது பிளாக் 14-வது தெரு கவிமணி சாலையில் உள்ள காலி இடத்தில் துர்நாற்றம் வீசியதை உணர்ந்தனர். முட்புதர்கள் நிறைந்த காலி இடத்தில் சோதனை செய்தபோது இடது கால் பகுதி கிடைத்தது. அந்த கால் வெட்டி வீசப்பட்ட உடலுக்கு உரிய கால் என போலீசார் உறுதி செய்துள்ளனர். வலது காலையும் மற்றொரு பகுதியில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.
தலையை தேடும் போலீஸ்
கால்கள் அங்கு கிடைத்து இருப்பதால் தலை, 2 கை மற்றும் வலது காலும் அந்த பகுதியில் வீசி இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். மனித உடல் உறுப்புகளை கட்டிங் மிஷன் மூலம் எந்த பிசுறும் இல்லாமல் துல்லியமாக வெட்டி இருக்கிறார்கள். அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
வயிறு பகுதியில் பெரிய மச்சம் ஒன்றும் இருக்கிறது. 2, 3 நாட்களில் காணாமல் போனவர்கள் பட்டியல் தமிழகம் முழுவதும் கேட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் 500 பேர் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த கொலையை செய்தது சைகோ கொலையாளியாக இருக்கலாம் என்றும் போலீசார் தேடி வருகின்றனர்.