போலீஸ் நிலையம் தகர்ப்பு: சுப. இளவரசன் உள்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை
சென்னை: போலீஸ் நிலையத்தை வெடிகுண்டு வீசி தகர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுப.இளவரசன் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் புத்தூர் போலீஸ் நிலையம் 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீஸ்காரர் ராஜேந்திரன் பலியானார். போலீஸ் நிலையத்தில் இருந்த ஆயுதங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. சுப.இளவரசன் தலைமையிலான தமிழர் விடுதலைப் படை என்ற இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக 11 பேர் பிடிபட்டனர். அவர்களில் லெனின் என்பவர் இறந்து விட்டார். இளங்கோ மணி என்பவர் ‘அப்ரூவர்' ஆனார்.
இதையடுத்து சுப.இளவரசன், சுந்தரம், வெங்கடேசன், அமல்ராஜ், குமார், வல்லரசு, ரவி, செங்குட்டுவன் என்ற மணிமாறன், முருகேசன் ஆகிய 9 பேர் கைது செய்யபட்டனர். சுப.இளவரசன் மீது போலீஸ் நிலைய தகர்ப்பு உள்பட மேலும் சில வெடிகுண்டு வழக்குகளும் உள்ளது.
9 பேர் மீது பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ராமசாமி வழக்கை விசாரித்து 9 பேர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறினார்.
திங்கட்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
அதன்படி தீர்ப்பு விவரத்தை நீதிபதி இன்று வாசித்தார். அவர் கூறியிருப்பதாவது:
குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப.இளவரசன், வெங்கடேசன், அமல்ராஜ் குமார், வல்லரசு, ரவி, முருகேசன், செங்குட்டுவன் என்கிற மணிமாறன் ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
‘சு' என்கிற சுந்தரத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தீர்ப்பை கேட்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் நண்பர்களும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு முன்பு குவிந்தனர். தீர்ப்பை கேட்டதும் அவர்கள் சோகத்துடன் கலைந்து சென்றனர்.
தீர்ப்பையொட்டி பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் வரை கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications