ஜெ. டிரைவர் மர்ம மரணத்துக்கு எடப்பாடி தான் காரணம்.. கனகராஜ் அண்ணன் தனபால் பரபரப்பு புகார்
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி: ஜெயலலிதாவின் கார் டிரைவர் மர்ம மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என விபத்தில் சிக்கி உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கடந்த 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஏப்ரல் 28ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த சயன் ஏப்ரல் 29ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இதில் சாயனின் மனைவியும், குழந்தையும் பலியாகினர்.
மேலும் ஓம் பகதூர் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து சகோதரரிடம் விசாரணை நடைபெற்றது.
சுமார் 4 மணிநேர விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனகராஜ் அண்ணன் தனபால், கனகராஜ் மர்ம மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.