அப்பல்லோ வாசலில் அதிகாரிகள்.. புகார்களை விசாரிக்காத போலீஸ் ஸ்டேஷன்கள்.. சென்னை மக்களுக்கு சோதனை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களால் அவர்களை அணுக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
தி.நகரை சேர்ந்த மகாவீர்சந்த் தோகாவின் கதை இது. மோசடி வழக்கு தொடர்பாக புகார் அளிக்கபோனவரை அப்படியே திருப்பியனுப்பியுள்ளனர் போலீசார். காவல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லை; முதல்வர் பந்தோபஸ்துக்காக அப்பல்லோவில் அவர்கள் உள்ளனர் என பதில் வந்துள்ளது. அலைந்து பார்த்து சோர்வடைந்த மகாவீர்சந்த், இறுதியாக கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று புகார் கொடுத்துள்ளார்.

அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஜெயந்தி ஹார்வே நிலைமை இன்னும் மோசம். கொள்ளையர்கள் வீடு புகுந்து பொருட்களை திருடிச் சென்ற நிலையிலும், இவரது புகாரை கேட்க சீனியர் அதிகாரிகள் போலீஸ் ஸ்டேஷனில் இல்லையாம். கேட்டால், அண்ணா நகர் போலீசாரும், அப்பல்லோவை நோக்கியே கைகாட்டுகிறார்களாம்.
இது ஏதோ, தி.நகரிலும், அண்ணா நகரிலும் மட்டும் நடந்த சம்பவங்கள் அல்ல. மொத்த தலைநகரிலும் குடிமக்கள் நிலைமை இதுவாகத்தான் உள்ளதாம். ஒன்று புகார் வாங்கப்படுவதில்லை, புகார் வாங்கினாலும் காவல்துறை செயல்படுவதில்லை, செயல்பட தூண்டுவதற்காக அதிகாரிகளை சந்திக்க முயன்றாலும் மக்களால் அது முடிவதில்லை.
சென்னையின் அனைத்து துணை கமிஷனர்களும் (டிசிபி), அப்பல்லோவை சுற்றிலும் தினமும் ஆஜராக கட்டளையாம். டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications