விபத்தில் உயிரிழந்த பாலிமர் நியூஸ் சேனல் ரிப்போர்டர்! ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்த முதலமைச்சர்!
நெல்லை: நெல்லை மாவட்ட பாலிமர் நியூஸ் சேனல் ரிப்போர்டர் முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.3 லட்ச நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு;
''திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவு கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து, படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

சாலை விபத்தில் உயிரிழந்த முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.'' இவ்வாறு அந்தக் குறிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே நெல்லை மாவட்டத்தில் புதிய தலைமுறை நியூஸ் சேனல் கேமராமேனாக பணியாற்றிய சங்கர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். தனக்கு அறிமுகமான பத்திரிகையாளராக இல்லாவிட்டாலும் கூட மாவட்ட அளவில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கும் நிதி உதவி அறிவித்து கவனம் ஈர்த்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications