பாஜக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்தது- பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப்பங்கீடு முடிவடைந்துள்ளதாக பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து உள்ளது. வேறு கட்சிகள் கூட்டணிக்குவரும் பட்சத்தில் தேவைக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.தொகுதி பங்கீடுகள் குறித்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
ஏற்கனவே எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்துவிட்டோம். அதனை டெல்லியில் இருந்து வெளியிடுவார்கள். இருந்தாலும் தற்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதில் மாற்றம் நடக்கலாம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பு, தமிழகத்தை சுரண்டிக்கொண்டு இருக்கும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அழிக்கப்பட வேண்டும் என்பது தான். அதனை செயல்படுத்தும் வகையில் பா.ஜ.க கட்சி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்கு ஒத்துழைப்பு தரும் கட்சிகளை தான் எங்களோடு சேர்த்துக்கொள்வோம்.
தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணிக்கு ஏன் சென்றது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. எதிர்மறை முடிவை தே.மு.தி.க. எடுத்து இருக்கிறது. இது தமிழக அரசியலுக்கு பொருந்தாத ஒன்று. தேர்தல் நடக்கும் வரை அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை மாற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
60 words: