அண்ணன் ரஜினிக்கு எதிர்காலத்தில் நிறைய வேலை கொடு தாயே...பொன். ராதா 'செம' வாழ்த்து!
தேர்தல் நெருங்கி வருவதால் ரஜினிகாந்த் பிறந்த நாளை அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ரொம்பவே விசேஷமாக கருதி வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். அதிலும் பொன். ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்தில் செமத்தியாக ஒரு பன்ச் வைத்து வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,64-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், நிரந்தர ஆரோக்கியத்துடனும் எல்லா செல்வங்களும், நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.
பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரங்களை உணர்ந்து ஏழைகளோடு வாழ்ந்து இந்தியாவில் ஈடு இணையற்ற நடிகராகவும், மனிதராகவும் உயர்ந்து விட்ட பின்பும் தன் கடந்த காலத்தை என்றும் நினைவில் கொண்டு வாழ்ந்தும், வாழ்வித்தும் வரும் அண்ணன் ரஜினிகாந்த் கடந்த கால பணிகளை விட எதிர்கால பணிகள் அதிகம் இருக்கும் வண்ணம் அன்னை சக்தி அருள் புரிய பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே ரஜினிகாந்த்தை பாஜக பக்கம் இழுக்க ரொம்பவே முயற்சித்து வருகிறார்கள். திருச்சிக்கு மோடி வந்தபோது அவருடன் ரஜினியை சந்திக்க வைக்க கடுமையாக முயன்றனர். ஆனால் ரஜினியோ, கண்ணா, ஆளை விடும்மா என்று கூறி எஸ்கேப் ஆகி விட்டார். மோடி சென்னைக்கு வந்தபோதும் இதே முயற்சிகள் நடந்தன. ஆனால் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற ரஜினி பட வசனம் போல, ரஜினி இந்தமுறையும் பிடிகொடுக்காமல் தப்பி விட்டார்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வேலை கொடு என்று பாபா படத்தில் வரும் சக்தி கொடு பாட்டை நினைவுபடுத்தி ஐஸ்அறிக்கை விடுத்துள்ளார் பொன் ராதா.
மனுஷரை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க போலிருக்கே...!