தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
வருகிற 2016ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணி, மக்கள் நல கூட்டு இயக்கம் ஒரு அணி என தற்போது மூன்று அணிகள் உருவாகி விட்டன. மற்ற கட்சிகள் இன்னும் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. பாமக மட்டும் முதல்வர் வேட்பாளாரை அறிவித்து தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. பாஜக அணியில் தேமுதிக, பாமக, மதிமுக என அணிகள் இணைந்தன. திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. காங்கிரஸ் வேறு வழியின்றி தனித்து போட்டியிட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதைலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கமாக அறிவித்து தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். இதனிடையே தேமுதிகவும், தமாகா கட்சியும் மக்கள் நல கூட்டு இயக்கத்தில் கைகோர்க்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தனர். கூட்டணி தொடர்பாக இரு தரப்பினரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்துடனான சந்திப்பு, நட்பு ரீதியானது என தமிழிசை செளவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை மக்கள் நல கூட்டணியில் இணையுமாறு அக்கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications