ஸ்ரீரங்கத்தில் தண்ணீராய் பாயும் பணமும், சோதனை செய்யப்படாத வாகனங்களும் – பொன்.ராதா புலம்பல்!
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறுகின்றது. வாகனச் சோதனையே இல்லை என்று தெரிவித்துள்ளார் பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கின்ற சிந்தனையோடு அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி பல தவறான வழிகளை கையாண்டு வருகிறார்கள்.

வீதிதோறும் சமையல் செய்து சாப்பாடு போடுவது, ஓட்டுக்காக பணம் கொடுப்பது, இலவசங்களை கொடுப்பது போன்றவை வெளிப்படையாக நடந்து வருகின்றன.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அங்கு குவிக்கப்பட்டு வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுவதும், ஆசைவார்த்தைகள் கூறப்படுவதும் அனைவரும் நன்கு அறிவார்கள்.
ஆளும் கட்சியின் இதே செயலை, ஆண்ட கட்சி தி.மு.கவும் செய்து வருவது ஸ்ரீரங்கம் தொகுதி பகுதிகளில் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. இதை தடுக்க தேர்தல் ஆணையர் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
சட்டமன்ற தொகுதி பகுதியில் எந்த ஒரு இடத்திலும் வாகன சோதனை நடத்தப்படாமல் பண புழக்கம் சர்வ சாதாரணமாக நடப்பது தேர்தல் நேரத்தில் எல்லாவித தவறுகளும் நடப்பதற்கு வாய்ப்பு அளித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பா.ஜ.க வேட்பாளர் சுப்பிரமணியம், திருச்சி நகர் மாவட்டத்தின் தலைவர் பார்த்திபன், துணைத்தலைவர் கோவிந்தன், மண்டல தலைவர் சர்வேஸ்வரன் போன்றோரை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்து அ.தி.மு.கவினர் தாக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேர்தலை சுமூகமாக இவர்கள் நடத்த விடமாட்டார்கள் என்பதற்கு அ.தி.மு.க.வின் நடவடிக்கை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. பாதுகாப்பான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக கையாள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications