டெலிகேட் பொசிஷன், நாளை நான் டெல்லியில இருப்பேன்.. ஜல்லிக்கட்டு தடையை நீக்க அரசு முயற்சி: பொன்.ராதா
கடலூர்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்துவருவதாகவும், இதுகுறித்து ஆலோசிக்க நாளை, தான், டெல்லி செல்ல உள்ளதாகவும், மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு மீது உச்சநீதிமன்றத்தின் தடை இருந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் ஒரு அறிவிக்கையை கடந்த வாரத்தில் வெளியிட்டது.

மத்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் அமைப்புகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில், இவ்வறிவிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தன. அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் இன்று மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்ட பிறகு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்த நான் நாளை (வியாழக்கிழமை) டெல்லி செல்ல உள்ளேன்.
இந்த ஆண்டு பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
லட்சக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக வெட்டிக்கொல்லப்படுவது குறித்தும், அடிமாடாக கொண்டுபோவது குறித்தும் பீட்டா போன்ற அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டும் பீட்டா அமைப்பு தொடர்ந்து செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications