வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கமலை கைது செய்ய சொல்வது வன்கொடுமை: பொன். ராதாகிருஷ்ணன்
நடிகர் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை கைது செய்யச் சொல்வது வன்கொடுமை என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: கமல்ஹாசனை கைது செய்ய சொல்வது தேவையற்றது என்றும், வன்கொடுமை சட்டத்தில் அவரை கைது செய்யக் கூறுவதுதான் வன்கொடுமை என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மூலம் எதிர்ப்புக் கிளம்பியது. அதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல், 'தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது' என கூறினார்.
இதற்கு ஆதரவும் எதிர்ப்பு கலந்த கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக அமைச்சர்கள் கமல் கருத்துக்கு கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருமையில் பேசி திட்டி வருகின்றனர்.
தமிழக அமைச்சர்கள்
இதற்கு நிதியமைச்சர் ஜெயக்குமார், 'கமல் பொத்தாம்பொதுவாக சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது' என பதில் அளித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கமலை 'அவன்' என ஒருமையில் விளித்து விமர்சித்தார்.
அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தக்கால் நடும் விழாவில் கலந்துகொண்டார் அமைச்சர் சிவி சண்முகம். அப்போது அவரிடம் கமல்ஹாஸன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'கமல் பணத்துக்காக எதையும் செய்வார். ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார்.
பொன். ராதாகிருஷ்ணன்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் கூறினார்.
வன்கொடுமை
நடிகர் கமலஹாசன் விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து பொறுப்பற்ற முறையில் உள்ளது என்று கூறினார். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை கமலை கைது செய்யக்கூறுவதுதான் வன் கொடுமை என்று கூறினார். சாதி கண்ணோட்டத்தில் இதனை பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராட்டிய பொன். ராதாகிருஷ்ணன்
சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறிய கமல்ஹாசனை பாரட்டுவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். இப்போது கமலை கைது செய்ய வேண்டும் என்று கூறும் அமைச்சர்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.