என் சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்
நாகர்கோவில்: தனது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதற்கான காரணத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் சிலரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்தது. அதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 2.98 கோடி அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
கடந்த ஏப்ரல் மாதம் வரை என்னிடம் இருந்த சொத்துவிவரங்களை லோக்சபா தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்கையில் தெரிவித்தேன். அண்மையில் என் குடும்ப சொத்து பிரிக்கப்பட்டது. அதில் என் பங்கு எனக்கு கிடைத்தது. அதனால் தான் என் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து நான் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளேன். தூய்மையான பாரதத்தை உருவாக்க முயற்சி செய்யும் மோடி அமைச்சரவையில் இருக்கும் நானும் தூய்மையானவனாக இருக்க முடிவு செய்துள்ளேன். என் சொத்து விவரங்கள், வருமானம் குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டேன்.
குமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்துள்ளேன். ரப்பர் விலை வீழ்ச்சியை தடுக்க தக்க நடிவடிக்கை எடுக்கப்படும் என்றார்.